ஆன்மிகம்
புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்த காட்சி.

புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழா

Published On 2020-01-18 04:42 GMT   |   Update On 2020-01-18 04:42 GMT
சி.என்.பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் மலையில் பிரசித்திப்பெற்ற புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் பழைய புராண ஏடுகளில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் என்று உள்ளது. எனவே இக்கோவில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கரிநாள் திருவிழா நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி அதிகாலையில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், காளியம்மன், ராஜராஜேஸ்வர், ராஜராஜேஸ்வரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் நடுவீரபட்டு, சி.என்.பாளையம், பாலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், புஷ்ப பிரபையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழு தலைவர் வைத்திலிங்கம், கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News