ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் லட்சத்தீப திருவிழாவில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி.

நெல்லையப்பர் கோவிலில் லட்சத்தீப திருவிழா

Published On 2020-01-18 02:59 GMT   |   Update On 2020-01-18 02:59 GMT
நெல்லையப்பர் கோவிலில் லட்சத்தீப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பத்திர தீபத்திருவிழா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்சத்தீப திருவிழாவும் நடைபெற்று வருகிறது. 6 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி கடந்த 13-ந் தேதி லட்சத்தீப திருவிழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. நேற்று அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு யாகம் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சுவாமி கோவில் மணிமண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. அந்த தீபம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும். அன்று மாலை 6.30 மணி அளவில் சுவாமி கோவிலில் உள்ள உள் சன்னிதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்மன் கோவில் உள் சன்னிதி, வெளி பிரகாரங்கள் ஆகிய இடங்களில் லட்சத்தீபம் ஏற்படுகிறது.

வருகிற 24-ந் தேதி இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சுற்றி பின்னர் இரவு 10 மணிக்கு நெல்லை டவுன் ரத வீதிகளில் வீதி உலா நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு ஆறுமுக நயினார் வெளிப்பிரகாரத்தில் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News