ஆன்மிகம்

நரசிம்மர் பக்தர்களுக்கு குழந்தை போன்றவன்

Published On 2019-05-16 08:03 GMT   |   Update On 2019-05-16 08:03 GMT
தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.
நரசிம்மருடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணிய கசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவராகவும் சேவை சாதிப்பதால், அவரைப் பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.
ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவருக்கு உண்டு. ஆதலால்தான் ‘‘பக்தவத்ஸலன்’’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

அதாவது, தன் பக்தர்களுக்குக் குழந்தை போன்றவன் என்பது பொருள். நம்மிடம் அளவற்ற கருணை கொண்ட ஸ்ரீ நரசிம்மரிடம் பயம் ஏன்?
நரசிம்மரை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவர் எளிதானவர்.

முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய ஆற்றல் நரசிம்மரிடம் உள்ளது. ஆதலால், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாகப் பலனும் காண முடியும்.

தஞ்சையைச் சுற்றி உள்ள சாலியமங்கலம், நீடாமங்கலம், மெலட்டூர், ஊத்துக்காடு, சூலமங்கலம் முதலான ஊர்களில் ஆண்டு தோறும் பாகவதமேளா நாடகங்கள் பல நாள்கள் நடத்தப்படுவதுண்டு. தற்போது மெலட்டூர் மற்றும் சாலியமங்கலத்தில் மட்டும் பாகவதமேளா நாடகங்கள் நடைபெறுகின்றன.

மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தி தோறும் சுவாமி சன்னதியில் ஒரே குடும்ப மரபில் வந்த பிராமண ஆண்கள் பிரகலாத நாடகத்தை நிகழ்த்துகின்றனர். தெலுங்கு மொழியில்தான் நாடகம் நடத்தப்படுகிறது. தெலுங்கு மொழி தெரியாத தமிழர்களே பெருமளவில் வந்திருந்து நாடகத்தைக் காண்கின்றனர். திருவள்ளூர், காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் தமிழில் கூடிய மகாபாரத, பாகவத, ராமாயண நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
Tags:    

Similar News