ஆன்மிகம்

சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2019-03-19 04:53 GMT   |   Update On 2019-03-19 04:53 GMT
சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.
சிவகிரி அருகே கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாட்கள் நடைபெறும். 5-ம் திருநாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு கோவில் வசந்த மண்டபத்தில் இருந்து முத்துக்குமாரசுவாமி பல்லக்கில் வருதல், சிறப்பு தீபாராதனை, மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசுவாமி அண்டரண்டபஷி வாகனத்தில் புறப்பாடு ஆகியவை நடந்தது.

நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தேவஸ்தானத்தில் இருந்து அம்மன் பல்லக்கில் வருதல், மதியம் ஞானப்பால் நிகழ்ச்சி, மாலை சுவாமி அழைப்பு, இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி மயில் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் கற்பக விருட்சகம் வாகனத்திலும் எழுந்தருளி, நான்கு ரதவீதிகளில் வீதிஉலா நடைபெற்றது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

9-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தெப்பத்திருவிழா நடக்கிறது. 
Tags:    

Similar News