ஆன்மிகம்

கள்ளழகர் கோவில் தெப்ப உற்சவம்

Published On 2019-02-20 08:14 GMT   |   Update On 2019-02-20 08:14 GMT
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நிறை நாளில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 18-ந்தேதி சிம்ம லக்கனத்தில் கஜேந்திர மோட்சம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து வர்ண குடைகளுடன், கோவில் யானை சுந்தரவள்ளி முன்னால் செல்ல மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்திற்கு சென்றார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பொய்கைகரைப்பட்டி கிராமத்தில் உள்ள மண்டூக தீர்த்தம் என்ற புஷ்கரணி தெப்பத்தின் குளக்கரையை சுற்றி வந்து, கிழக்கு பக்கமுள்ள மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கும், தேவியர்களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் மாலை வந்த வழியாகவே சென்று சாமி கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

இந்த விழாவில் கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முகராஜ பாண்டிய புலிகேசி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News