ஆன்மிகம்
அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மணக்கோலத்தில் அருள்பாலிப்பதை படத்தில் காணலாம்.

காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2019-02-19 03:27 GMT   |   Update On 2019-02-19 03:27 GMT
காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திளரான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

16-ந் தேதி இரவு கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் பெட்டத்தம்மன் மலை குகையில் குடிகொண்டுள்ள அம்மன் (அரங்கநாயகி தாயார்) அழைத்து வரப்பட்டார்.

கோவிலில் அரங்கநாயகி தாயார் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்கநாத பெருமாள் வீற்றிருந்தார். திருமலை நல்லான் சக்கரவர்த்தி சுவாமிகள், வேதவியாசர் சுதர்சன பட்டர் சுவாமிகள், ஸ்ரீதர் பட்டர் சுவாமிகள் மற்றும் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் சுரேஷ் நாராயண அய்யங்கார் மற்றும் ரங்கநாத அய்யங்கார், திருவேங்கட அய்யங்கார், மதுசூதன அய்யங்கார் ஆகியோர் யாகம் வளர்த்தி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

காலை 6.25 மணிக்கு அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். இதையடுத்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மாலை மாற்றுதல், பெருமாள் திருவாராதனம், சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் நிகழ்ச்சிகள் நடந்தன.

சுமங்கலி பெண்கள் அனைவருக்கும் தாலிசரடுகள் வழங்கப்பட்டன. மணக்கோலத்தில் பெருமாள் பல்லக்கில் திருவீதி உலா வந்து கோவில் வளாகத்தில் உள்ள கல்யாணமண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவமும் நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News