ஆன்மிகம்

ஜடாயுவுக்கு ராமர் திதி செய்த தீர்த்தக் கட்டம்

Published On 2018-10-16 06:36 GMT   |   Update On 2018-10-16 06:36 GMT
ராமர் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார். அந்த தீர்த்தம் “ஜடாயு தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் அழிந்து விடும் என்பது ஐதீகம்.
தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் ராமருக்கு வழிப்பாட்டு தலங்கள் அமைந்துள்ளன. ராவணன், சீதையை சிறையெடுத்து சென்ற போது பட்சிகளின் அரசன் ஜடாயு போர் செய்து இறந்த இடம் நெல்லை அருகே அருகன் குளத்தில் உள்ளது.

சீதா தேவியை ராவணன் சூழ்ச்சியால் சிறை பிடித்து கடத்திச் சென்ற போது ஜடாயுணும் பறவை ராவணனை வழி மறித்து போரிட்டது. ராவணன் சிவபெருமானிடம் தவம் செய்து பெற்ற தெய்வ வாளால் ஜடாயுவின் இறக்கையை வெட்டி வீழ்த்தினார்.

ஜடாயு தரையில் விழுந்து குற்றுயிரும் குலை உயிருமாய் நடந்த கதையை கூறினார். பின் தனக்கு மகன் ஸ்தானத்தில் இருந்து ராமர்தான் திதி செய்ய வேண்டும் என்று கேட்டு உயிர் விட்டார்.

உடனே ராமர் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார். அந்த தீர்த்தம் “ஜடாயு தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. அந்த தீர்த்தத்தை கொண்டு ஜடாயுவுக்கு ராமர் தர்ப்பணம் செய்தார்.

இதன் அருகே ராமன் பெயரை கொண்ட ராம தீர்த்தம், சிவபெருமான் பெயரை கொண்ட சிவதீர்த்தம் உள்ளது. இந்த மூன்று தீர்த்தத்தில் யார் நீராடல் செய்கிறார்களோ, அவர்களுக்கு நூறு பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து விடுகிறது என்பது ஐதீகம்.

இங்கு ஒரு மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் ராமர் ஜடாயுவின் பிண்டத்தினை கரைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீர்த்தத்தினை எடுத்து சென்று வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தியும், தங்கள் தொழில் நிறுவனத்தில் தெளித்தும் மக்கள் நற்கதி பெற்று வருகின்றனர். நோய், சூனியம், தீராத வலி மற்றும் பித்ரு கடன் கழிக்க இந்த ஆலயம் வந்து வழிபடுவது பலன்களைத் தரும்.

இந்த ஆலயம் நெல்லை சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாழையூத்து பைபாசில் தாமிரபரணியை கடக்கும் பாலம் அருகே உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து மினி பஸ், சேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.

Tags:    

Similar News