ஆன்மிகம்

கண்ணனுக்கு ஆடை கொடுத்த திரவுபதி

Published On 2018-09-18 06:35 GMT   |   Update On 2018-09-18 06:35 GMT
பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். ‘கண்ணா, சீக்கிரம் வா!’ என்று குரல் கொடுத்து விட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான். பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, ‘கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்!’ என நின்று யோசித்தாள்.

அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும் போது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறான் என யூகம் செய்து புரிந்து கொண்டாள். உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசி விட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதிஉபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.
Tags:    

Similar News