ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்: நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

Published On 2017-11-15 04:56 GMT   |   Update On 2017-11-15 04:56 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவ நிறைவு நாளையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவ நாட்களில் உற்சவர் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் தினமும் மாலை கோவில் கொடி மரத்து அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாளான 12-ந் தேதி அன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் இரவு 7 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபம் வந்த பின் இரவு 8.15 மணிக்கு தொடங்கி இரவு 9.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளினார். அப்போது சின்னப்பெருமாளை அர்ச்சகர் தலையில் சுமந்தவாறு 3 முறை புஷ்கரணியில் மூழ்கி எழுந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார்.

பின்னர் காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
Tags:    

Similar News