ஆன்மிகம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட சாமி கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-10-07 03:53 GMT   |   Update On 2017-10-07 03:53 GMT
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் தேர்திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர்திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் எழுப்ப கொடி ஏற்றப்பட்டது.

இதையொட்டி காலையில் பால் பணிவிடை, மதியம் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் பணிவிடை உகப்படிப்பு, அதைதொடர்ந்து திருஏடுவாசிக்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வந்தார்.

விழா வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பும். இரவு 8.30 மணிக்கு அய்யா வைகுண்டர் அன்ன வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், பூம்பல்லக்கு வாகனம் மற்றும் இந்திரவிமானங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

விழாவின் கடைசி நாளான 15-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 11.30 மணியளவில் திருத்தேரில் அய்யா எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தினமும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News