ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் சொர்ணாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

சொர்ணாம்பிகை அம்மனுக்கு வளையல்கள் சாத்துப்படி

Published On 2017-08-12 03:16 GMT   |   Update On 2017-08-12 03:16 GMT
சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும்ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சொர்ணாம்பிகை அம்மனுக்கு வளையல்கள் சாத்துப்படி நிகழ்ச்சி நடந்தது.
சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்தநிலையில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் 21 ஆயிரம் வளையல்கள் சாத்துப்படி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சொர்ணாம்பிகை அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து சொர்ணாம்பிகை அம்மனுக்கு வளையல்கள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு வளையல்கள், திருமாங்கல்ய சரடு, குங்கும பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.

முன்னதாக வேறு ஒரு கட்டளைதாரர் தரப்பில் சுகவனேசுவரர் கோவிலின் விழா மண்டபத்தில் சொர்ணாம்பிகை அம்மன் உற்சவருக்கு 18 ஆயிரம் வளையல்கள் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக சொர்ணாம்பிகை அம்மன் உற்சவரை விழா மண்டபத்தில் கொண்டு வர கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு அவர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் சிலர் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு இதுதொடர்பாக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், உதவி ஆணையர் சபர்மதி மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் அன்பு மற்றும் போலீசார் ஆகியோர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கட்டளைதாரர் சார்பில் சொர்ணாம்பிகை அம்மனுக்கு வளையல்கள் சாத்துப்படி செய்யப்பட்டது. பின்னர் இந்த வளையல்கள் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News