ஆன்மிகம்
குண்டத்தை சுற்றி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த காட்சி.

வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

Published On 2017-07-25 03:20 GMT   |   Update On 2017-07-25 03:20 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கோவில் தலைமை பூசாரி பரமேஸ்வரன் சிறப்பு பூஜைகள் செய்து, 36 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட குண்டத்தை திறந்து வைத்தார். பின்னர் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் குண்டத்தை சுற்றி வண்ண கோலமிடப்பட்டு கண்ணை கவரும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அதன்பின்னர் மாலை 5 மணிக்கு குண்டம் உபயதாரர்கள் தனியார் மண்டபத்தில் இருந்து மாலை 3.45 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு, பவானி ஆற்றங்கரையை அடைந்தனர்.

அங்கிருந்து பொங்கல் வைக்க பானையில் ஆற்று நீரை எடுத்து முத்தமிழ் விநாயகர் கோவிலை அடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைக்கு பின்னர், ஊர்வலம் குண்டம் அமைக்கப்பட்டு உள்ள இடத்தை அடைந்தது. அங்கு பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிம்ம வாகனத்துக்கு தலைமை பூசாரி பரமேஸ்வரன் சிறப்பு அபிஷேக பூஜைகளை செய்தார். இதையடுத்து குண்டத்தில் விறகுகள் அடுக்கப்பட்டு, கற்பூரம் வைத்து தீபம் ஏற்றப்பட்டது. சிறிது நேரத்தில் குண்டத்தில் அடுக்கப்பட்ட விறகுகளில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையர் க.ராமு, குண்டம் அமைப்பு உபயதாரர்கள் கவாலியர் எம்.எஸ்.மதிவாணன், எம்.எஸ்.குமணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் இரவு 8 மணிக்கு கோவை நீலாம்பரி இன்னிசை குழு மற்றும் இரவு 10 மணிக்கு லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.

அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மன் அழைப்பும், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News