ஆன்மிகம்

சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்கள்

Published On 2017-05-15 09:52 GMT   |   Update On 2017-05-15 09:52 GMT
நஷ்டம், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் நரசிம்மரை வழிபாடு செய்யலாம். சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள்.

செங்காடு- யோக ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் : யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் இருவரையும் ஒரே இடத்தில் சோளிங்கர் மாதிரி மலை ஏறாமல் தரையிலேயே பார்க்க வேண்டுமானால் திருப்போரூர் அருகே உள்ள செங்காடுக்கு செல்ல வேண்டும்.

பொன்னிமேடு நரசிம்மர் : சென்னை மூலக்கடை ரெட்ஹில்ஸ் சாலையில் மூலக்கடையிலிருந்து வெகு அருகில் உள்ளது இத்தலம். இங்கு நரசிம்மரின் மிக உயரமாக நிற்கும் சிலை உள்ளது. கூடவே லட்சுமி தேவியும் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உயரமான இரண்டு நிற்கும் சிலைகளில் இதுவும் ஒன்று.

ஸ்ரீவேங்கட நரசிம்மர் கோவில், மேற்கு மாம்பலம் : 900 ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி இங்கே எழுந்தருளி அவர் முன்னிலையில் இங்குள்ளவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார்.

நங்கநல்லூர் நரசிம்மர் : மகாலட்சுமி (நங்கை) இப்பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கோவில் கொண்டிருக்கிறாள். நங்கை நல்லூர் என்பதே மருவி நங்கநல்லூர் ஆகிஇருக்கிறது. அந்தக் கோவில்தான் நரசிம்மர் கோவில். லட்சுமி நரசிம்மர் கோவில் புதையுண்டு போயிற்று, தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்.



இத்தலம் ஆதிகாலத்தில் தட்ஷண திபாலயா என்று அழைக்கப்பட்டதாகவும், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் கேட்டுக் கொண்டபடி நரசிம்மர் இங்கேயே தங்கி அருள் பாலிக்க ஒப்புக் கொண்டதாகவும் வரலாறு இருக்கிறது. உள்ளே சக்கரத்தாழ்வார் தனது பதினாறு கைகளில் விதவிதமான ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். கச்கரத்தாழ்வாரின் பதினாறு ஆயுதங்களும் பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கின்றன.

இவரின் பின்னால் ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா விக்ரகம் உள்ளது. அடுத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது. 5 அடி உயர முள்ள சிலா விக்ரகம். திருமுடியில் கிரீடம். கழுத்தில் பெரிய நீலக்கல் பதித்த மாலை, நான்கு கரங்களின் மேலே உள்ள கரங்களில் சங்கும். சக்கரமும் உள்ளன. இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்காரம் செய்ததால் இங்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. சோளிங்கரில் உள்ளது போல் இங்கும் சடாரியில் நாகம் காணப்படுகிறது.

மறைமலைநகர் நரசிம்மர் : சென்னையை அடுத்த மறைமலை நகர் போர்ட் மோட்டார் கம்பெனி அருகில் உள்ளது இந்த அபூர்வ நரசிம்மரின் கோவில். ஆதிசேஷன் பீடத்தில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்துள்ளது அற்புதமாக உள்ளது. ஆதிசேஷன் குடை பிடித்த மாரி உள்ளது. தாயாரும் பெருமாளும் இருவரும் ஒரு கையால் ஒருவரை ஒருவர் அணைத்த மாதிரி இருக்கின்றனர்.

நரசிம்மரின் மந்திரத்தால் செய்யப்பட்ட அட்சர மாலையும் சாளக்கிராம மாலையும் நரசிம்மருக்குச் சாத்தப்பட்டுள்ளது. தாயார் சந்நிதியில் தாயாருக்கு மகாலட்சுமி மந்திரத்தால் அட்சய மாலை செய்து சாற்றப்பட்டுள்ளது. மூலவரும் தாயாரும் தாமரை மலர்கள் மேல் பாதங்களை வைத்துள்ளனர். இது ஒரு பரிகாரத்தலம்.

பைராகிமடம், சவுகார்பேட்டை : இத்தலத்தில் லட்சுமி நரசிம்மர் சந்நிதி மிகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.
Tags:    

Similar News