ஆன்மிகம்
கொடி மரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

மாசித்திருவிழாவையொட்டி பழனி மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்

Published On 2017-03-01 05:50 GMT   |   Update On 2017-03-01 05:50 GMT
மாசித்திருவிழாவையொட்டி பழனி கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பழனி கிழக்கு ரத வீதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், பழனி முருகன் கோவிலின் உபகோவில் ஆகும். இங்கு லிங்கம் வடிவில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு அம்சம். ஆண்டுதோறும் இந்த கோவிலில் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவு மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து புண்ணியாவாஜனம், விநாயகர் பூஜை, சிறப்பு யாகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காப்பு கட்டப்பட்டு கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து மாரியம்மன் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வந்து திருக்கம்பத்தில் வைத்தலும், தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் பெரிய தங்க மயில் வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி திருஉலா காட்சியும் நடந்தது. இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணமும், குமாரசமுத்திரம் அருள்மிகு அழகு நாட்சியம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணியம், சந்திரமவுலி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பழனி கோவில் முதல்நிலை கணக்கு அதிகாரி வீராச்சாமி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Similar News