ஆன்மிகம்
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தபோது எடுத்த படம்.

செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

Published On 2017-02-04 05:38 GMT   |   Update On 2017-02-04 05:38 GMT
செய்யாறு டவுன் திருவோத்தூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
செய்யாறு டவுன் திருவோத்தூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரத்துடன் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 7-வது நாளான நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தேர் அலங்கரிக் கப்பட்டிருந்தது.

செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

விநாயகர், வேதபுரீஸ்வரர், பாலகுஜாம்பிகை ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் சன்னதி தெரு, ஆற்றங்கரைத்தெரு, குமரன்தெரு முக்கிய வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இன்று (சனிக்கிழமை) குதிரை வாகனத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நந்தி வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் நிறைவு நாளான 6-ந்தேதி பகலில் நடராஜர் உற்சவமும், மாலையில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

இரவு கொடி இறக்குதலுடன் ராவணேஸ்வரர் திருக் கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

இற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை உதவி ஆணையாளர் மோகனசுந்தரம், செய்யாறு ஆய்வாளர் ராஜா, செயல் அலுவலர் உமேஷ்குமார் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Similar News