ஆன்மிகம்

கார்த்திகை தீபத்திருவிழா 2-ம் நாள்: தங்க சூரியபிறை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

Published On 2016-12-05 06:31 GMT   |   Update On 2016-12-05 06:31 GMT
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காலை தங்க சூரியபிறை வாகனத்தில் சந்திரசேகரர் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்தனர். இரவு 10 மணியளவில் வாணவேடிக்கை யுடன் சாமி வீதிஉலா நடந்தது.

வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையாரும், அம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் தங்க சூரியபிறை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.

பின்னர் கோவில் யானைருக்கு முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே தங்க சூரிய பிறை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாட வீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணா மலையம்மன்சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Similar News