ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் ஆதிமூர்த்தி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பெரியநாயக்கன்பாளையம் ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா

Published On 2016-12-03 03:59 GMT   |   Update On 2016-12-03 03:59 GMT
பெரியநாயக்கன்பாளையம் ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இது குறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் இந்த ஆண்டு விழாவையொட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதற்கு கோவில் நிர்வாக அறங்காவலர் ஆர்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் கோவிந்தராஜூலு, செந்தில்குமார், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியையொட்டி காலை கருவறையில் மூலவருக்கு திருமஞ்சன பூஜை நடைபெற்றது.

பின்னர் மாலையில் ரங்க மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சீர்வரிசை ஊர்வலம், முத்துகுத்துதல், பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தல், கோத்திர விஸ்தாரணம், கன்னிகாதானம் செய்வித்தல், திருமாங்கல்ய தாரணம், புஷ்பம் சமர்ப்பித்தல், லாலி பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஆதிமூர்த்தி பெருமாள்- ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆதிமூர்த்தி பெருமாள்- ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News