ஆன்மிகம்

கால சர்ப்ப தோஷம் சரியாக எந்த தெய்வத்தை வணங்கலாம்

Published On 2016-12-02 09:23 GMT   |   Update On 2016-12-02 09:24 GMT
கால சர்ப்ப தோஷமும், அதனை நிவர்த்தி செய்ய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. பிறகு 2 இல் ராகு, 8 இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது அதாவது லக்னம், 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் இருந்தால் அதற்குப் பெயர் சர்ப்ப தோஷம். ராசிக்கும் இதுபோல் இருந்தால் அதுவும் சர்ப்ப தோஷம்.

ராகு, கேதுவிற்கு இடையே எல்லா கிரகங்களும் அடங்கி விடுகிறதென்றால் அதற்குப் பெயர் கால சர்ப்ப தோஷம். சர்ப்ப தோஷம் என்பது என்னவென்றால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும். கால சர்ப்ப தோஷம் உடையவர்கள் 33 வயதுவரை பல இன்னல்களுக்கு ஆளாகி அதன் பிறகு பெரிய வெற்றிகளை அடைந்துள்ளார்கள். எனவே இந்த தோஷத்தை கண்டு பயப்பட வேண்டியதில்லை.
 
நிழல் கிரகங்கள் ராகு மற்றும் கேதுவிற்கு நடுவே மற்ற ஏழு கிரகங்களும் மாட்டிக்கொண்டால் அதனை கால சர்ப்ப தோஷம் என்று கூறுவர். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். இந்த வழிபாடுகளை மேற்கொண்டால் கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிட்டும்.
 
ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கு நடுவில் ஏனைய ஏழு கோள்களும் வானில் இருக்கும் நிலையை சர்ப்பகாலம் என்றும், அந்த காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை கால சர்ப்பத்தில் பிறந்தவர்கள் என்றும் முன்னோர்கள் குறிப்பிடுவர்.
 
ஒருவரது ஜாதகத்தில் உள்ள லக்னத்தில் தொடங்கி, ஏழு வீடுகளுக்குள் தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியும், ஏழாம் வீட்டில் தொடங்கி, லக்னத்தில் முடிபவர்களுக்கு வாழ்கையின் பிற்பகுதியும் சிக்கலாக அமையும். சிக்கல் என்பதற்குள் திருமண வாழ்க்கை தடங்கல், வேலையின்மை, தீய- கொடிய பழக்கங்களுக்கு ஆளாதல் மற்றும் பிறரால் ஒதுக்கப்படல் ஆகிய நிலைமைகளும் ஏற்படலாம்.
 
பரிகார ஸ்தலம் :
 
* குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இக்கோயில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. கால சர்ப்ப தோஷம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோஷம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழப்பது பெரிய தோஷம் அது. இத்தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.
 
* காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும்.
 
* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

Similar News