சினிமா

என் பெயரை இருட்டடிப்பு செய்கிறார் - கங்கணா ரனாவத் மீது இயக்குநர் கிரிஷ் புகார்

Published On 2019-01-29 06:54 GMT   |   Update On 2019-01-29 06:54 GMT
கங்கணா ரனாவத் நடித்துள்ள மணிகர்னிகா படம் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் கிரிஷ், கங்கணா தனது பெயரை இருட்டடிப்பு செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். #Manikarnika #KanganaRanaut #RadhaKrishnaJagarlamudi
சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கியவர் கிரிஷ். மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

என்.டி.ஆர் படத்துக்கு முன்பு ஜான்சி ராணி வாழ்க்கை வரலாற்றை மணிகர்னிகா என்ற பெயரில் இந்தியில் இயக்கி வந்தார் கிரிஷ். இதில் பிரபல இந்தி நடிகையும், தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவருமான கங்கணா ரனாவத், ஜான்சி ராணியாக நடித்திருக்கிறார். மணிகர்னிகா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிரிஷ் என்.டி.ஆர் படத்தை இயக்க ஒப்புக்கொண்டு அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.

அப்போது மணிகர்னிகா படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுத்து தர கேட்டதற்கு கிரிஷ் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தை இயக்கும் பொறுப்பை கங்கணா ரனாவத் ஏற்க முன்வந்ததுடன் இயக்குனர் பொறுப்பில் தனது பெயரை இடம்பெற செய்தார்.



படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. கங்கணா ரனாவத் பெயர் போட்டுக்கொண்டது பற்றி கிரிஷ் கூறும்போது,

ஜான்சிராணி படத்தை கடந்த ஜூன் மாதமே முழுமையாக முடித்து கொடுத்து விட்டேன். எல்லோரும் டப்பிங் பேசினார்கள். கங்கணா ரனாவத் மட்டும் டப்பிங் பேசாமல் இருந்தார். பிறகு என்னிடம் தொடர்பு கொண்ட அவர், படத்தில் சில காட்சிகளை மாற்றி அமைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த கேட்டதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சோனுவின் கதாபாத்திரத்தை இடைவேளைக்கு முன்பே கொல்வதுபோல் அமைக்க வேண்டும் என்றார்.

வரலாற்றில் அதுபோல் கிடையாது என்று கூறியும் ஏற்க மறுத்துவிட்டார். சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று என்னை கேட்ட போது நான் வேறு படத்தை இயக்குவதாக கூறிவிட்டேன். உடனே கங்கணாவே டைரக்டர் பொறுப்பை ஏற்பார் என்றார்கள்.



மணிகர்னிகா படத்துக்காக என்னுடைய வாழ்நாளில் 400 நாட்களை செலவழித்துள்ளேன். 109 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். அந்த படத்தை இயக்கியதற்கான சம்பளத்தில் எனக்கு 30 சதவீதம் சம்பளம்தான் தரப்பட்டது.

முழுபடத்தையும் நான் முடித்த நிலையில், சில காட்சிகளை மட்டும் மீண்டும் படப்பிடிப்பு செய்த கங்கணா, இயக்குனர் என்று தனது பெயரை போட்டுக் கொண்டிருக்கிறார். இயக்குனர் பணி எதுவும் செய்யாத நிலையில் அவர் எப்படி அப்படத்தின் இயக்குனருக்கான தகுதியை பெறுவார்?’.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கங்கணாவின் சகோதரி ரங்கோலி சந்தேல் ‘கிரிஷ் சற்று அமைதியாக இருங்கள். நீங்கள் தான் முழு படத்தையும் டைரக்ட் செய்தீர்கள். ஆனால் கங்கணா தான் அந்த படத்துக்கான அடையாளம். எல்லோருக்கும் தெரிந்த முகம். அவளை இந்த வெற்றியை கொண்டாடவிடுங்கள்’ என்று பதில் அளித்துள்ளார். #Manikarnika #KanganaRanaut #RadhaKrishnaJagarlamudi

Tags:    

Similar News