சினிமா
வேலூரில் அஜித் ரசிகர்கள் மோதல் - 2 பேருக்கு கத்திக்குத்து
அஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்ற அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. #Viswasam #AjithKumar #ViswasamFDFS
அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விஸ்வாசம்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது.
சிவா இயக்க அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமய்யா, விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் நள்ளிரவு 1.30 மணிக்கு சில திரை அரங்குகளில் ரிலீசானது. கண் விழித்து பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் உள்ளிட்ட சில திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் உதவியுடன் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.
வேலூரில் ஒரு திரையரங்கில் சில ரசிகர்கள் நாக்கில் சூடம் ஏற்றி அஜித் படம் ரிலீசானதை கொண்டாடியதோடு வெற்றி அடைய பிரார்த்தனை செய்தனர். அதே நேரத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை சீண்டுவதைப் போல், கட் அவுட்டுகளில் வசனங்களையும் ரசிகர்கள் அச்சிட்டிருந்தனர்.
வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). இவரது உறவினர் ரமேஷ் (30) இருவரும் அஜித் ரசிகர்கள். வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அலங்கார் தியேட்டருக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சியில் படம் பார்க்க சென்றனர்.
அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு ரசிகர்கள் முண்டியடித்தபடி தியேட்டருக்குள் சென்ற போது, பிரசாத்துக்கும், மற்றொரு தரப்பில் வந்த அஜித் ரசிகர்களுக்கும் சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் பிரசாத்தை வயிற்றில் குத்தினர். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களிலும் வெட்டினர். இதனை தடுக்க வந்த ரமேசையும் தலையில் கத்தியால் வெட்டினர்.
இதனை கண்ட ரசிகர்கள் தியேட்டரில் சிதறி ஓடினர். கடும் பதட்டம் ஏற்பட்டது. காயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கத்தியால் குத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். #Viswasam #AjithKumar #ViswasamFDFS