சினிமா
ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு தேர்வான இந்திய குறும்படம் ‘பிட்டூ’
குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘பிட்டூ’ படம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சினிமா துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ஜல்லிக்கட்டு மலையாள படம் அனுப்பப்பட்டது. சிறந்த சர்வதேச படத்துக்கான பிரிவுக்கு இது பரிந்துரைக்கப்பட்டது. இந்த போட்டி பிரிவில் பங்கேற்கும் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஜல்லிக்கட்டு இடம் பெறவில்லை. வெளிநாட்டினர் பலர் ஜல்லிகட்டு படத்தை பார்த்து பாராட்டி இருந்தனர். இதனால் படத்துக்கு விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘பிட்டூ’ படம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இரு பள்ளி தோழிகள் பற்றிய கதையே இந்த படம். கரிஷ்மா தேவ் துபே இயக்கி உள்ளார். பிட்டூ குறும்பட குழுவினருக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது.