சினிமா
ரஜினிகாந்த், கே.பாலசந்தர்

நான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Published On 2020-07-09 07:25 GMT   |   Update On 2020-07-09 07:25 GMT
தான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் சார் தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இன்று என் குருவான கே.பி சார் அவர்களுடைய 90வது பிறந்தநாள். கே.பாலசந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தலேனா கூட நான் நடிகனாயிருப்பேன். கன்னட மொழியில் ஒரு வில்லன் கதாபாத்திரத்திலோ, சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலோ நடித்து சிறிய நடிகராக இருந்திருப்பேன். 

ஆண்டவன் புண்ணியத்தில் மிகப்பெரிய பேரும் புகழோட, நல்ல வசதியோடு வாழ்வதற்கு காரணமே, கே. பாலசந்தர் சார் அவர்கள். என்னை அவர் தேர்ந்தெடுத்து எனக்குப் பெயர் வைத்து, என்னுடைய மைனஸ் எல்லாவற்றையும் நீக்கி, என்னிடமுள்ள பிளஸ்ஸான விஷயங்களை எனக்கே காட்டிக்கொடுத்து. என்னை ஒரு முழு நடிகனாக்கி, நாலு படங்களிலும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து, ஒரு நட்சத்திரமா தான் என்னைத் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். 


என் வாழ்க்கையில் என்னுடைய அப்பா, அம்மா, என்னை வளர்த்து ஆளாக்கிய என் அண்ணன், பாலசந்தர் ஆகிய நால்வரும் எனக்கு தெய்வங்கள். அவர் எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நடிகர், நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து சின்னத்திரையிலும் ஈடுபட்டு லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தார். 

எத்தனையோ இயக்குனர்களிடம் வேலை செய்துள்ளேன், ஆனால் கே.பி சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை விடுங்கள், செட்டின் மேலே நிற்கும் லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார். அந்த மாதிரி ஒரு கம்பீரம் கே.பி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக, எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தார். இன்னும் நிறைய நாள்கள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News