சினிமா

ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன்? - தமன்னா விளக்கம்

Published On 2018-08-19 11:43 GMT   |   Update On 2018-08-19 11:43 GMT
முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். #Tamannah
தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள தமன்னா பாகுபலி படத்துக்கு பிறகு திறமையான நடிகை என்று பெயர் எடுத்தார். இப்போது சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி என்ற இன்னொரு சரித்திர படத்திலும் நடிக்கிறார். அதோடு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்கிறார். இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

இதற்கு பதில் அளித்து தமன்னா கூறியதாவது:–

‘‘நான் சினிமா உலகுக்கு வந்து 10 வருடங்கள் தாண்டிவிட்டது. இத்தனை காலம் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நீங்கள் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது ஏன்? அப்படி ஆடாதீர்கள் என்று பலரும் என்னிடம் சொல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நடனம் என்பது எனது சினிமா வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கிறது. 



இந்த அளவுக்கு நான் உயர்வதற்கு நடனத்தோடு சேர்ந்த நடிப்பும் காரணம். பெரிய கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருப்பது இல்லை. குறைவான காட்சிகளே அவர்களுக்கு கொடுப்பார்கள். அதில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவது கஷ்டம். அந்த நடிப்பை மட்டும் வைத்து ரசிகர்களை நமது பக்கம் இழுக்க முடியாது. 

எனவேதான் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். நடனம் மூலமாக ரசிகர்களை எனது பக்கம் இழுத்தேன். ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தாலும் மறுப்பது இல்லை. எனது உடல் எடை கூடாதது குறித்தும் பேசுகிறார்கள். நான் பிடித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். ஆனாலும் அளவோடு சாப்பிடுகிறேன்.’’

இவ்வாறு தமன்னா கூறினார்.
Tags:    

Similar News