சினிமா
கேரள வெள்ளத்தில் தவித்த நடிகை அனன்யா
தமிழில் நாடோடிகள், சீடன் போன்ற படங்களில் நடித்த நடிகை அனன்யா, கேரள வெள்ளத்தில் சிக்கி தவித்திருக்கிறார். #KeralaFloods #Ananya #KeralaRain
நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அனன்யா. இவர் கேரளாவில் கொச்சி நகரில் வசித்து வருகிறார்.
கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அனன்யாவின் வீடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக அனன்யாவும், அவரது குடும்பத்தினரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ளம் அதிகரித்தது.
இதையடுத்து அனன்யாவும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி பெரும்பாவூர் பகுதியில் உள்ள தோழி ஆஷா சரத்தின் வீட்டுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக அனன்யா வீடியோவில் பேசி அதை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-
தொடர்ந்து பெய்த மழையால் எனது வீடு வெள்ளத்தில் மூழ்கி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் வீட்டில் வெள்ளம் அதிகரித்துக் கொண்டே சென்றது. கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி விட்டோம். தற்போது பெரும்பாவூரில் உள்ள எனது தோழி ஆஷா சரத்தின் வீட்டில் தங்கியுள்ளோம்.
இன்னும் மழை பெய்து கொண்டேதான் இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எல்லாம் கடவுளின் கையில் உள்ளது. ஏராளமானோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. எனவே அனைவரும் உதவ முன்வர வேண்டும். எங்கள் பகுதி மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்ட அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.