சினிமா
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியான சம்பவத்திற்கு பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அஜித், விஜய் மௌனம் சாதித்து வருவது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. #Vijay #Ajith
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் ரஜினி, கமல், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் முதல் சூரி வரை எல்லா பெரிய, சின்ன நடிகர்களுமே தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வலுவாக பதிவு செய்தனர். ஆனால் விஜய்யோ, அஜித்தோ இதுவரை வாயே திறக்கவில்லை.
தமிழ்நாட்டில் ரஜினிக்கு பிறகு விஜய், அஜித் இருவருக்கு தான் ரசிகர்கள் அதிகம். இருவரது ரசிகர்களும் நினைத்தால் ஒரு செய்தியை உலக அளவிற்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் தமிழ்நாட்டில் நடந்த இத்தனை பெரிய சம்பவத்துக்கு இருவருமே கண்டனம் தெரிவிக்காதது அவர்களின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரசிகர் ஒருவர் இதுபற்றி கூறும்போது ‘விஜய்யாவது இதற்கு முன்பு சில பிரச்சினைகளில் கண்டனம் தெரிவித்தார். அனிதா பலியானபோது வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். ஆனால் இந்த சம்பவத்தில் அவரும் கருத்து கூறவில்லை.
இவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் அதனை உலக அளவில் கொண்டு செல்லலாம் என்று காத்திருந்தோம். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாத மாதிரி இருந்துகொண்டார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது’ என்றார். விஜய், அஜித் மட்டும் அல்லாது முன்னணி கதாநாயகிகளும் தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.