சினிமா

தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி: காலா ரிலீஸ் தாமதம்?

Published On 2018-05-24 10:35 GMT   |   Update On 2018-05-24 10:35 GMT
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் நடந்து வருவதால், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ திரைப்படம் தள்ளி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Kaala
ரஜினி நடித்து சங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீசர் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். தூத்துக்குடி கலவரம்-துப்பாக்கி சூடு காரணமாக அந்த முடிவை ரஜினி ரத்து செய்துவிட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தார். பொதுவாக ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு அவரது படத்துக்கான விளம்பர வேலை என்ற ரீதியில் எப்போதுமே விமர்சிக்கப்படும்.

எனவே தனது அரசியல் அடியை ரஜினி கவனமாக எடுத்து வைக்கிறார். ரஜினி நடிப்பில் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்று நில உரிமைக்காக போராடும் போராளியாக ரஜினி நடித்திருக்கிறார். படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கலவரத்தால் பற்றி எரியும் சூழ்நிலையில் ‘காலா’ படத்தை வெளியிடுவது பிரச்சினையை உண்டாக்கும். மேலும் விமர்சனங்களும் கிளம்பும் என்று ரஜினி யோசிக்கிறார்.

இந்த வாரம் ஆந்திராவில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டு இருந்தார். அவற்றை தள்ளிப்போட்டு விட்டார். இதே நிலை நீடித்தால் பட வெளியீட்டையும் தள்ளி வைக்க ரஜினி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக முதல் கட்டமாக சர்வதேச விநியோகஸ்தர்களுடன் ரஜினி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
Tags:    

Similar News