சினிமா
வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் - பிரகாஷ்ராஜ் பேட்டி
வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் செய்கிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். #PrakashRaj
கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து ஊர் ஊராக பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூருவில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு 120 ரூபாயுடன் சென்னைக்கு வந்தேன். சினிமா வாய்ப்புக்காக அலைந்தேன். நடிக்க வாய்ப்பு கிடைத்த பின்பு இன்று வரை 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன்.
3 மாநிலங்களில் எனக்கு வீடும், நிலமும் உள்ளது. இது இந்த சமூகம் எனக்கு வழங்கிய பரிசு. வாழ்வு தந்த சமூகத்திற்கு நானும் ஏதாவது செய்தாக வேண்டும்.
இதற்காகவே நான், சமூக நல செயல்பாடுகளில் ஈடுபட்டேன். அப்போது சமூக செயல்பாட்டாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டார். என் மனதை இச்சம்பவம் பாதித்தது. இக்கொலைக்கு பின்னணியில் சமூக விரோதிகள், வன்முறையாளர்கள் இருந்தனர்.
அவர்களுக்கு எதிராக போராட விரும்பினேன். பாரதீய ஜனதா கட்சி மதவாதத்தை தூண்டுகிறது என கருதினேன். எனவேதான் அந்த கட்சியை கண்டித்து பிரசாரம் செய்கிறேன். ஊர் ஊராக சென்று கூட்டம் போட்டு என் கருத்தை தெரிவிக்கிறேன்.
சமூக ஊடகங்களில் இக்கருத்து பரவுகிறது. இதனால் எனக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. அதை நான் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #PrakashRaj