சினிமா
படிப்படியாக வளர்ந்தவர்களில் விஜய்தான் சிறந்த உதாரணம் - விஷால்
படிப்படியாக வளர்ந்தவர்களில் நடிகர் விஜய்தான் சிறந்த உதாரணம் என்று ‘மிஸ்டர் சந்திரமௌலி’ பட விழாவில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார். #Vijay #Vishal
தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில், நாயகியாக ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்கள். இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் படக்குழுவினர், சூர்யா, விஷால், சாந்தனு, இயக்குனர்கள் சுசீந்திரன், கவுரவ் நாராயணன், விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் விஷால் பேசும்போது, ‘கவுதம் கார்த்திக்கான நேரம் வந்தாச்சு. இனிமேல் இவருடைய நேரம் தான். ஒரு ஹீரோவால் முதல் படத்திலேயே பெரியாளாக மாறமுடியாது. படிப்படியாக வளர முடியும். அப்படி படிப்படியாக வளர்ந்தவர்களில் நடிகர் விஜய் தான் சிறந்த உதாரணம். அதுபோல் கவுதம் கார்த்திக்கும் படிப்படியாக வளர்ந்து வருகிறார்’ என்றார்.