சினிமா

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்

Published On 2018-04-20 05:11 GMT   |   Update On 2018-04-20 05:11 GMT
‘மொழி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாச்சியார் படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. மேலும் இப்படத்தில் நடிகர் விதார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடிய படத்தை தமிழில் இயக்குகிறார் ராதாமோகன்.

ராதாமோகன் டைரக்ஷனில், ‘மொழி’ என்ற படத்தில் ஜோதிகா ஏற்கனவே நடித்து இருந்தார். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், ஜோதிகாவுக்கு நல்ல பெயரையும், பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து சில வருட இடை வெளிக்குப்பின், ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜோதிகா.

வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘துமாரி சுலு’என்ற இந்தி படத்தை தழுவிய கதை, இது. இந்தி படத்தில், வித்யாபாலன் கதாநாயகியாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக மானவ் கவுல் என்ற இளம் கதாநாயகன் நடித்து இருந்தார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில், நேகா நடித்திருந்தார். இந்த மூன்று பேரை சுற்றி கதை பின்னப்பட்டு இருந்தது.

இதில் வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். அவருடைய கணவராக விதார்த் நடிக்கிறார். நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் ஆவார்.



சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் ராதாமோகன், இந்த படத்தின் தலைப்பை கண்டுபிடிக்கும் படி ரசிகர்களுக்கு போட்டி வைத்தார். தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது. இப்படத்திற்கு ‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

போப்டா நிறுவனத்துக்காக ஜி.தனஞ்செயன், இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள், சென்னையில் உள்ள ‘ஹலோ எப்.எம்.’ ஸ்டேஷனில் படமாக்கப்பட உள்ளன.
Tags:    

Similar News