சினிமா

முதல் முறையாக மம்முட்டிக்கு ஜோடியாகும் அனுஷ்கா

Published On 2018-04-01 05:15 GMT   |   Update On 2018-04-01 05:15 GMT
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் அனுஷ்கா, முதல் முறையாக மலையாளப் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சொந்த ஊராக கொண்ட அனுஷ்கா திரையுலகுக்கு வந்த ஆரம்ப காலத்தில், கடைக்கோடி நடிகையாக இருந்தார். முதன் முதலாக அவர் ‘ரெண்டு’ என்ற தமிழ் படத்தில் நடித்தபோது, அவர் பிரபலமாகவில்லை. அவரை முன்னணி கதாநாயகியாக உயர்த்தியது, தெலுங்கு பட உலகம்தான். அதனால்தான் அனுஷ்கா, ஐதராபாத்தில் சொந்த வீடு கட்டி, அங்கேயே வசித்து வருகிறார்.

“நிறைய படங்களில் நடிக்க வேண்டாம். குறிப்பிட்ட படங்களில் நடித்தால் போதும்” என்ற கொள்கையை வைத்திருப்பவர், அனுஷ்கா. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழி படங்களில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் தேர்வு செய்து நடித்த படம்தான், ‘அருந்ததி.’

திகிலான கதையம்சம் கொண்ட அந்த படம் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்துக்கு பின்பே அனுஷ்காவின் ‘மார்க்கெட்’ உச்சத்துக்கு போனது. மனதுக்கு பிடித்த கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்து, அவர் தனது ‘மார்க்கெட்’டை தக்க வைத்துக்கொள்கிறார்.



சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து நீண்ட காலம் திரையுலகில் நீடித்து இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதனால்தான் அவர் திருமணம் செய்து கொள்வதை தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறார். ஆனால், அவருக்கு மிக சீக்கிரமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள்.

அனுஷ்காவுக்கு வயது ஆகிக்கொண்டே போகிறதே என்று பெற்றோருக்கு கவலை. அதனால்தான் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அவசரப்படுகிறார்கள். பெற்றோர்களின் விருப்பத்தை புரிந்து கொண்ட அனுஷ்கா, இந்த வருடம் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வதாக சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்பது அனுஷ்காவின் நீண்ட கால ஆசை. அந்த ஆசை, இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. விரைவில் தொடங்க இருக்கும் ஒரு மலையாள படத்தில், மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த படத்தை சரத் சந்திப் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து, ‘பரோல்’ என்ற மலையாள படத்தை இயக்கியிருக்கிறார். அதில் மம்முட்டி சிறை கைதியாக நடித்து இருக்கிறார். 
Tags:    

Similar News