சினிமா

ஹிருத்திக் ரோஷன் ரகசியங்கள் திருடப்பட்டதா? - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத்

Published On 2018-03-23 07:31 GMT   |   Update On 2018-03-23 07:31 GMT
ஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு ரகசியங்கள் சேகரிக்க கங்கனா ரணாவத் முயற்சி செய்ததாக வெளியான தகவல் மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘தாம்தூம்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சம்பளமும் மற்ற நடிகைகளை விட அதிகம். ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறார். ஹிருத்திக் ரோஷனுக்கும் தனக்கும், காதல் இருந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டு அவரது வெறுப்புக்கு ஆளானார்.

கங்கனாவுக்கு ஹிருத்திக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்தி டைரக்டர் கரன் ஜோகருடனும் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனின் டெலிபோன் தகவல்களை வக்கீல் மூலம் திருட முயன்ற குற்றச்சாட்டில் கங்கனா ரணாவத் தற்போது சிக்கி இருக்கிறார்.

இந்தி நடிகர் நவாஜுதீன் சித்திக்கின் மனைவி டெலிபோன் அழைப்பு தகவல்களை ரகசியமாக சேகரித்த குற்றச்சாட்டில் ரிஷ்வான் என்ற வக்கீலை மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இவர் நவாஜுதீன் சித்திக், கங்கனா ரணாவத் இருவருக்கும் வழக்கறிஞராக இருக்கிறார். ஹிருத்திக் ரோஷனுக்கு எதிராக கங்கனா தொடர்ந்துள்ள வழக்குக்கும் இவர்தான் வக்கீலாக இருக்கிறார்.



ரிஷ்வானை போலீசார் விசாரித்தபோது ஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு தகவல்களை சேகரிக்க திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் போன் நம்பரை கங்கனா ரணாவத் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை போலீசார் கூறும்போது, ‘ஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு விவரங்களை சேகரிக்க நடந்த முயற்சி குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. கங்கனா ரணாவத்திடமும் விசாரிக்கப்படும்” என்றனர்.

இதனால் மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலி கூறும்போது, “வழக்கு ஆவணங்களை வக்கீலிடம் கொடுத்து வைத்து இருந்தோம். குற்றத்தை நிரூபிக்கட்டும் அதன்பிறகு பதில் சொல்கிறோம்” என்றார்.
Tags:    

Similar News