சினிமா
சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் - லண்டன் மியூசியத்தில் இடம்பெறும் முதல் தமிழர்
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் சத்யராஜை லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியம் கவுரவித்துள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. #Sathyaraj #Baahubali
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் - ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் படத்திற்கே திருப்புமுனை வாய்ந்ததாக அமைந்தது.
ராஜ விசுவாசியான கட்டப்பா பாகுபலியை கொல்வது போன்று முதல் பாகத்தை முடித்ததால், இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த ரகசியத்தை அறியவே அடுத்த பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். கடந்த ஆண்டு அதற்கும் விடை கிடைத்தது.
இந்நிலையில், இதுநாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் நடிகர் சத்யராஜுக்கு கிடைத்திருக்கிறது. லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கவுரவப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸூக்கு பாகுபலி தோற்றத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது. லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தமிழ் நடிகர் ஒருவரின் மெழுகுச்சிலை இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Sathyaraj #Baahubali