சினிமா
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா
ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். #Jyothika #TumhariSulu
ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவின் வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ஜோதிகா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் `செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜோதிகா அடுத்ததாக வித்யா பாலனின் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. வித்தியாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாகவும், ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், மொழி படத்திற்கு பின்னர் இயக்குநர் ராதாமோகன் மற்றும் ஜோதிகா மீண்டும் இணைகின்றனர். இந்த படத்தை பொஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் திருமணமான, நடுத்தர வயதுப் பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார். அவரின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும்.
`செக்கச்சிவந்த வானம்' படத்தில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. அதன்பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் ‘தும்ஹரி சுளு’ படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Jyothika #TumhariSulu #VidyaBalan