சினிமா

`அருவி' வெற்றிக்கு நடுவே வருத்தம் தெரிவித்த எஸ்.ஆர்.பிரபு

Published On 2017-12-19 04:18 GMT   |   Update On 2017-12-19 04:18 GMT
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் `அருவி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வருத்தம் தெரிவித்துள்ளார்.
டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் படம் ‘அருவி’.

கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். 

சமூகத்தின் முக்கிய பிரச்சனையை பற்றி பேசியிருக்கும் அருவி படத்திற்கும், அதிதியின் நடிப்புக்கும், படத்தின் இயக்குநருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இயக்குநர் ஷங்கர், சுசீந்திரன், கார்த்திக் நரேன்,  நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சந்திரன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் அருவி படத்தை பாராட்டியுள்ளனர். 



அதேநேரத்தில் படத்தில் பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சில விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

#அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்! என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags:    

Similar News