தமிழ் சினிமா சிறப்பாக வளர்ந்து இருக்கிறது: பிரியங்கா
வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியங்கா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் இவர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறார்.
இது குறித்து பிரியங்கா கூறும்போது, “நான் கேரளாவில் பிறந்தாலும், என்னை நடிகை ஆக்கியது தமிழ் சினிமாதான். ‘வெயில்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால்தான் நான் நடிகையாகி இருக்கிறேன்.
ஏதோ ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நல்ல கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். இப்போது தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு படம் ‘தீயோர்க்கு அஞ்சேல்’. இது, இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், துணிவுடன் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் படம். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம்.
தமிழ் சினிமா இப்போது நிறைய மாறி இருக்கிறது. இளைஞர்கள் புதிய சிந்தனையுடன் படம் எடுக்க வருகிறார்கள். மற்ற மாநில சினிமாக்களுக்கு உதாரணமாக தமிழ் சினிமா சிறப்பாக வளர்ந்து இருக்கிறது. நான் மீண்டும் தமிழில் நடிப்பது மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பேன்” என்றார்.