சினிமா

உடல்நலக்குறைவால் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி

Published On 2017-12-04 07:24 GMT   |   Update On 2017-12-04 07:24 GMT
உப்புச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல இசையமைப்பாளரான கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல இசையமைப்பாளர் கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 30-ந் தேதி இரவு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். பரிசோதனையில் உப்புசத்து குறைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் உடல் நலம் தேறி உள்ளார். அவரை இசையமைப்பாளர் தேவா சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கைஅமரன் அறிவிக்கப்பட்டிருந்தார். வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.



இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மீண்டும் ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி வருகிற 21-ந் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த முறை ஆர்.கே.நகரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கைஅமரன் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவியது. இதை மறுத்த பாரதீய ஜனதா தலைமை கங்கை அமரன் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை என தெரிவித்ததோடு, கரு.நகராஜனை வேட்பாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News