சினிமா

சிரிச்சு சிரிச்சு வெறுப்பேத்திய நாயகிக்கு பளார் விட்ட இயக்குநர்

Published On 2017-11-24 04:31 GMT   |   Update On 2017-11-24 04:32 GMT
இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கி வரும் `தொட்ரா' படத்தில் நாயகியாக அறிமுகமாகும் நடிகை வீணாவின் கன்னத்தில் இயக்குநர் மதுராஜ் பளார் என்று ஒரு அறை கொடுத்திருக்கிறார்.
ஜே.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’.

இந்தப் படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபி சிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது இயக்கத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.

நடிகர் பாண்டியராஜின் மகன் பிருத்விராஜன் நாயகனாகவும், வீணா என்கிற புதுமுகம் நாயகியாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா அறிமுகமாகிறார். வில்லனாக தயாரிப்பாளர் ஜெய் சந்திராவின் கணவர் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார்.



படப்பிடிப்பின் போது நாயகி வீணாவை அடித்தது குறித்து இயக்குநரிடம் கேட்ட போது,

மலையாள நடிகை வீணாவை நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளோம். அவரை தான் அடித்தது உண்மை தான். ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் அதன் சீரியஸ்னெஸ் உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாக இருந்ததால் கிட்டத்தட்ட 30 டேக்கிற்கு மேல் போனது. அதனால் ஒருகட்டத்தில் கோபம் வந்து அவரை அடித்தும் விட்டேன். மற்றபடி படம் முழுதும் நன்றாக நடித்துள்ளார் வீணா என்றார்.

இந்த படத்திற்கு கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா-2’வுக்கு இசையமைத்த உத்தமராஜா இசையமைக்கிறார்.



படத்தின் இசையமைப்பாளர் உத்தமராஜா பேசும்போது, “இந்தப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். ஒரு தீம் சாங்.. இதில் ‘பக்கு பக்குங்குது’ என்கிற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்தப்பாடலை இயக்குநர் மதுராஜ் எழுதியுள்ளார். உண்மையிலேயே சிம்பு சாரை பாட வைக்கும் வரை எனக்கு ‘பக்கு பக்குன்னு இருந்தது. ஆனால் ஒரு புது இசையமைப்பாளர் என ஒதுக்காமல், பாடல் பிடித்திருந்ததால் பெருந்தன்மையுடன் பாட ஒப்புக்கொண்டார் சிம்பு” என்று கூறினார்.

படப்பிடிப்பு பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, பழநி, கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News