சினிமா

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்

Published On 2017-11-07 13:03 GMT   |   Update On 2017-11-07 13:03 GMT
தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.
தெலுங்கில் பிசியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்போது தமிழிலும் பிசியாகி வருகிறார். இது பற்றி கூறிய அவர்...

“தமிழ் படங்களில்தான் முதலில் நடித்தேன். அப்போது நான் நடித்த 2 படங்கள் எனக்கு பெரிய அடையாளம் கொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கில் நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. எனவே, தெலுங்கில் பிசியாகிவிட்டேன்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் நடிக்க அழைப்புகள் வந்தன. என்றாலும், கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ தெலுங்கிலும், தமிழிலும் உருவானது. அதில் நடிக்க அழைத்த போது நேரம் அமைந்தது.

தற்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறேன். இதில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். இயக்குனர் சொன்னபடி, சிறப்பாக நடித்து இருக்கிறேன். படப்பிடிப்பின் போது கார்த்தி மிகவும் உதவியாக இருந்தார். வசனம் பேச உதவி செய்தார். அவருடைய வீட்டில் இருந்து எனக்கு சாப்பாடு வரவழைத்து கொடுத்தார். அவருடைய அம்மா தயாரித்த சிறுதானிய உணவுகள் அருமை. அவியலை அனுபவித்து சாப்பிட்டேன்.

நான் ஒவ்வொரு படத்துக்கும் 100 சதவீத உழைப்பை தருகிறேன். சில படங்கள் வெற்றி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுவதில்லை. முடிந்த விசயங்களை பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். சினிமாவில் மாறுபட்ட கதைகள் வர வேண்டும். எனக்கும் மாறுபட்ட வேடங்கள் கிடைக்க வேண்டும்.

அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன். மீண்டும் கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடக்கிறது. இன்னும் முடிவாகவில்லை”.
Tags:    

Similar News