சினிமா

அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்

Published On 2017-10-16 12:56 GMT   |   Update On 2017-10-16 12:56 GMT
பல படங்களை இயக்கி, முன்னணி இயக்குனராக வலம் வரும் சுசீந்திரன், பெரிய நட்சத்திரங்களான அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? விளக்கம் அளித்துள்ளார்.
‘வெண்ணிலா கபடிகுழு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே, இப்படத்தை தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘அழகர் சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இவர் இயக்கத்தில் தற்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் உருவாகி உள்ளது. இதில் விக்ராந்த், சந்திப் கிஷன், சூரி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருந்தது. சில காரணங்கள் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவர் இதுவரை அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்கவில்லை. இவர்களை வைத்து இயக்காதது ஏன் என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை. விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார். அஜித்திடம் கதை சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால்தான் இவர்களை வைத்து இன்னும் படம் எடுக்கவில்லை.

தீபாவளி எப்போதும் எனக்கு சிறப்பாக இருக்கும். ரஜினியின் நடித்த ‘தளபதி’ படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு பார்த்தேன். நான் முதலில் உழைத்த பணத்தில் என் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி தினத்தில்தான் துணி எடுத்து கொடுத்தேன்.

நான் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கியிருக்கிறேன். இப்படம் என்னுடைய நேரடி தெலுங்கு படம்.

எந்த படத்தையும் 2 பாகத்தை எடுக்க எனக்கு உடன்பாடு இல்லை.’ என்றார்.
Tags:    

Similar News