சினிமா

வருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயனின் புதிய திட்டம்

Published On 2017-10-15 06:01 GMT   |   Update On 2017-10-15 06:01 GMT
இனிமேல் வருடத்திற்கு எனது நடிப்பில் 2 படங்கள் வெளியாகும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 22ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தை அடுத்து பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய சிவகார்த்திகேயன், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ‘அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி என்றாலே பட்டாசு தான். அதனால் உங்களது குடும்பத்தோடு பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள். உங்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

நான் உங்களை எல்லாம் சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சந்திப்பேன். மேலும், ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவ்வாறு ஆகிவிடுகிறது.

ஆனால், அடுத்தாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு படங்களைத் தேர்வு செய்யவுள்ளேன்’ என்றார்.
Tags:    

Similar News