சினிமா

மும்பையில் ஷாருக்கானின் கேண்டீன் இடிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2017-10-07 09:40 GMT   |   Update On 2017-10-07 09:40 GMT
மும்பையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட நடிகர் ஷாருக்கானின் கேண்டீனை இடித்து மும்பை மாநகராட்சியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மும்பை மலாடு மேற்கு, சுந்தர் நகரில் டி.எல்.எச். பார்க் என்ற 16 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான திரைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதில் நடிகர் ஷாருக்கான் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கேண்டீன் நடத்தி வந்தார். நடிகரின் திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த கேண்டீனை பயன்படுத்தி வந்தனர். விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த கேண்டீனை இடிக்குமாறு நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை மாநகராட்சியினர் நோட்டீஸ் அனுப்பினர்.

எனினும் நடிகர் ஷாருக்கான் தரப்பினர் மாநகராட்சியின் நோட்டீசுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியினர் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கேண்டீனை இடித்து அகற்றினர்.

கடந்த 2015-ம் ஆண்டு மும்பை மாநகராட்சியினர் பாந்திரா வீட்டின் அருகில் நடிகர் ஷாருக்கான் ரோட்டை ஆக்கிரமித்து கட்டிய சிமெண்ட் சாய்வு தளத்தை இடித்து அகற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News