சினிமா

மெர்சல் தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்

Published On 2017-10-06 10:18 GMT   |   Update On 2017-10-06 10:18 GMT
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘மெர்சல்’ படத்தை விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்தது.

2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்திருக்கிறார். இந்த தலைப்பை தற்போது விஜய் நடித்துள்ள படத்திற்கு ‘மெர்சல்’ தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த தலைப்புக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வர்த்தககுறியீடு (டிரெட் மார்க்) பெற்றுள்ளது. இதனால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 6ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. தற்போது ‘மெர்சல்’ படத்தின் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் ‘மெர்சல்’ தலைப்பை பயன்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் தடை இல்லை என்றும் கூறியுள்ளார். உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News