சினிமா

விருதுகளை திரும்பக் கொடுக்க நான் முட்டாள் இல்லை: பிரகாஷ்ராஜ்

Published On 2017-10-03 10:29 GMT   |   Update On 2017-10-03 10:29 GMT
நடிகர் பிரகாஷ் ராஜ் தான் வாங்கிய தேசிய விருதுகளை திரும்பிக் கொடுப்பதாக வந்த செய்திக்கு, விருதுகளை திரும்பக் கொடுக்க நான் முட்டாள் இல்லை என்று கூறியிருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் தேசிய விருதுகளை திரும்பிக் கொடுக்கப் போவதாக வதந்திகள் பரவத் தொடங்கியதற்கு பிறகு அவர் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

எனக்கு கொடுக்கப்பட்ட விருதுகளை தான் திருப்பிக் கொடுக்கப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. விருதுகளை திருப்பித்தர நான் முட்டாள் அல்ல. என்னுடைய சிறப்பான பணிக்காக வழங்கப்பட்ட விருதுகளைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

கடந்த மாதம் 5-ந்தேதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதியுள்ளார். இதனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பதாக பிரகாஷ் ராஜ் அவரை கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில், நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாரவில்லை. இந்திய குடிமகனாக என்னுடைய பிரதமரின் அமைதியைப் பற்றி பேச விரும்புகிறேன். உங்கள் அமைதி என்னை காயப்படுத்துகிறது என்பதை சொல்ல விரும்புகிறேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு. எனவே விருதை திரும்ப கொடுப்பதாக தன்னை பற்றி வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News