சினிமா

சினிமா வாய்ப்புக்காக அனுசரிக்க சொன்னார்கள்: போட்டுடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On 2017-09-15 07:41 GMT   |   Update On 2017-09-15 07:41 GMT
‘காக்காமூட்டை’ படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமா வாய்ப்புக்காக தன்னை அனுசரிக்க சொன்னதாக கூறியிருக்கிறார்.
‘காக்காமூட்டை’ படத்தின் மூலம் பிரபலமாகி, தற்போது இந்தி பட உலகம் வரை சென்றிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

திரை உலகம் பற்றி அவர் அளித்த பேட்டி...

“தென் இந்திய படங்களில் நடிகை சிகப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இந்தி பட உலகில் அப்படி நினைப்பது இல்லை.

‘டாடி’ இந்தி படத்தில் என்னை நடிக்க அழைத்த போது, எனக்கு இந்தி தெரியுமா என்று நடிகர் அர்ஜுன் ராம்பல் கேட்டார். தெரியாது என்றேன். உடனே வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்தனர். அதன் பிறகு நடிகை தேர்வுக்கு வரும்படி உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். சென்றேன், அவர்கள் எதிர்பார்த்த ஆஷா காவ்லி கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருந்தால் என்னை ஒப்பந்தம் செய்தனர்.



தற்போது சினிமா உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தேடிய போது என்னை அனுசரிக்க சொன்னார்கள். இந்த பிரச்சினை எனக்கு இருந்தது. ஆனால் இப்போது, அது போன்று யாராவது வற்புறுத்தினால் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து அசிங்கப்படுத்தி விடுவார்கள். எனவே, அப்படிப்பட்டவர்கள் பயப்படுகிறார்கள்.

தற்போது, பட வாய்ப்புக்காக அனுசரிக்க வேண்டும் என்ற பிரச்சினையே இல்லை. என்றாலும், சம்பள வி‌ஷயத்தில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. முன்னணி நடிகர்கள் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்கினால், நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கு ரூ.3 கோடி தான் கொடுக்கப்படுகிறது. இந்த வி‌ஷயம் மட்டும் இது வரை மாறவில்லை”.


Tags:    

Similar News