சினிமா

கமல் அரசியலுக்கு வர வேண்டும் : எஸ்.வி.சேகர்

Published On 2017-09-06 11:16 GMT   |   Update On 2017-09-06 11:16 GMT
கமல்ஹாசனை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சந்தித்த பின், கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ‘இனியும் முகமூடி போட்டுக் கொண்டு இருக்க முடியாது’ என்று சமீபத்தில் கூறினார்.

எனவே, கமல் தீவிர அரசியலில் இறங்க தயாராகி விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சந்தித்தார். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நானும் கமலும் 40 வருடங்களாக நண்பர்கள். அதனால் அவரை இன்று சந்தித்தேன். சமீபகாலமாக அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். எனவே அவர் அரசியலுக்கு வர வேண்டும். கட்சி தொடங்க வேண்டும் என்று கூறினேன்.

கமல் நேர்மையானவர். அவர் அரசியலுக்கு வருவது நல்லது. தமிழ்நாட்டுக்கு நேர்மையான அரசியல் தலைவர்கள் தேவை. மூப்பனார் அரசியல் கட்சி தொடங்கிய போது படித்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுபோல் கமல் கட்சி தொடங்கினால் படித்தவர்கள் ஆதரவு அவருக்கு கிடைக்கும்.

மக்களும் ஆதரவு கொடுப்பார்கள். எனக்கும் கமலுக்கும் ஒத்த கருத்துக்கள் ஏராளமாக உண்டு. எனவே, அவர் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.
Tags:    

Similar News