சினிமா

இசை கலைஞராகும் போது எதிர்காலத்தை நினைத்து பயந்தேன் : ஏ.ஆர்.ரகுமான்

Published On 2017-09-01 10:32 GMT   |   Update On 2017-09-01 10:33 GMT
மலேசியாவில் ஒன்ஹார்ட் படம் வெளியீடு நிகழ்ச்சியில், இசை கலைஞராகும் போது எதிர்காலத்தை நினைத்து பயந்தேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்க நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சிகளின் தொகுப்பு ‘ஒன்ஹார்ட்’ என்ற பெயரில் திரைப்படமாகி இருக்கிறது. ஹாலிவுட் பாணியில் உருவான இந்த படம், நேற்று முன்தினம் மலேசியாவில் வெளியிடப்பட்டது. 20 ஆயிரம் பேர் கூடிய அரங்கத்தில் திரையிடப்பட்ட ‘ஒன்ஹார்ட்’ படத்தை அனைவரும் ஆரவாரத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.

இந்த படம் பற்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்...

“ஹாலிவுட்டில் இசை கலைஞர்களின் கச்சேரியை படமாக எடுத்திருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’ கான்சாட் திரைப்படம் புகழ் பெற்றது. அதுபோன்று எடுக்கப்பட்ட இந்த படத்தை இந்தியாவில் 8-ந்தேதி வெளியிடுகிறோம்.

எனது இசை அனுபவங்கள், வாழ்க்கை பற்றிய என் புரிதல், எனது இசை குழுவினரின் அனுபவ பகிர்வு போன்றவற்றை கதை ஓட்டத்துடன் ஆத்மார்த்த சினிமாவாக இதில் பதிவு செய்திருக்கிறோம். ‘ஒன்ஹார்ட்’ என்பது எனது அறக்கட்டளையின் பெயர். இந்த படத்தின் வசூல் அந்த அறக்கட்டளைக்கு போகும். இதன்மூலம் வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பள்ளிப்படிப்பை முடித்ததும் கல்லூரியில் சேராமல் இசை கலைஞரானபோது எனது எதிர் காலத்தை நினைத்து பயந்தேன். 10 ஆண்டுகள் வரை இந்த பயம் இருந்தது. இந்த படம் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடந்த 16 இசை கச்சேரிகளில் பல தமிழ் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இதில் பார்க்கலாம். இந்த படத்தை பார்ப்பவர்கள் இசை கலைஞர்கள் உலகத்துக்குள்ளே வந்துவிடுவார்கள். படத்தை பார்த்த பலர் உணர்ச்சி பெருக்கில் அழுதுவிட்டனர்” என்றார்.
Tags:    

Similar News