சினிமா

உதவியாளர் வைத்துக்கொள்ள பயமாக இருக்கிறது: காஜல் அகர்வால்

Published On 2017-08-11 06:24 GMT   |   Update On 2017-08-11 06:24 GMT
எனது மானேஜர் போதை பொருள் வழக்கில் கைதானதால் யாரையும் நம்ப முடியவில்லை. உதவியாளர் வைத்துக்கொள்ள பயமாக இருக்கிறது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“போதை பொருள் வழக்கில் எனது மானேஜர் ரோணி கைதானது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரையும் நம்ப முடியவில்லை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ரோணி எனக்கு மட்டும் மானேஜராக இல்லை. நிறைய பேருக்கு மானேஜர் வேலை பார்த்துள்ளார்.

தயாரிப்பாளர்களிடம் எனது சம்பள விவரங்கள் பற்றி பேசுவது, கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக்கொள்வது போன்ற பணிகளை செய்தார். அவர் கைதானதை தொடர்ந்து இனிமேல் மானேஜரே வைத்துக்கொள்வது இல்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். சம்பளம், கால்ஷீட் விவரங்களை இனி எனது குடும்பத்தினரே கவனித்துக் கொள்வார்கள்.

வெவ்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறேன். சிலரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறேன். நான் நம்பியவர் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவரும்போது சங்கடமாக இருக்கிறது. அதனால்தான் பொறுப்புகளை குடும்பத்தினரிடம் தற்போது ஒப்படைத்து இருக்கிறேன்.



ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் வருகின்றன. நெருக்கடிகளுக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தங்களுக்கும் உட்படுகின்றனர். இந்த மாதிரியான நேரங்களில் நமக்கு சொந்தமானவர்கள் அருகில் இருந்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். எனது அதிர்ஷ்டம் என்னை சுற்றி அந்தமாதிரி நல்ல ஆட்கள் இருக்கிறார்கள்.

சினிமாவில் நெருங்கிய நண்பர் என்று யாரும் இல்லை. ஆனாலும் நான் எல்லோரிடமும் நட்புடன் இருப்பேன். எனது குடும்பம்தான் எனக்கு பலம். எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அவர்களிடம் சொல்லி விடுவேன். எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் முதல் போன் அம்மாவுக்குதான் பண்ணுவேன். அவரிடம் சிறிது நேரம் பேசியபிறகு மனது லேசாகி விடும்.

அடடா, இந்த சிறிய விஷயத்துக்காகவா இவ்வளவு பயந்தோம் என்று அம்மாவிடம் பேசிய பிறகு தோன்றும். மனஅழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தனிமையில் இருக்க கூடாது. குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்க வேண்டும்”.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Tags:    

Similar News