சினிமா

‘மீசையை முறுக்கு’ படத்துக்கு வரவேற்பு: நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பது உறுதி - சுந்தர்.சி

Published On 2017-07-26 10:05 GMT   |   Update On 2017-07-26 10:05 GMT
‘மீசையை முறுக்கு’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால், நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பது உறுதியாகிவிட்டது என்று சுந்தர்.சி கூறியிருக்கிறார்.
இயக்குனர் சுந்தர்.சி.யின் தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‘மீசையை முறுக்கு’. ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசை அமைத்துள்ள இந்த படத்தில் ஆத்மிகா, விக்னேஷ், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர்.சி....

“இந்த படம் அனைத்து சென்டர்களிலும் நன்றாக ஓடி எதிர்பாராத வெற்றியை கொடுத்து இருக்கிறது. இது நல்ல படம். நன்றாக ஓடும் என்று நான் தான் சொல்லிக் கொண்டு திரிந்தேன். யாரும் நம்பவில்லை. இப்போது எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 250 தியேட்டர்களில் வெளியிட்டோம். அது இப்போது இரண்டு மடங்கு ஆகிவிட்டது. கேரளாவில் முதலில் தியேட்டர்கள் தரவில்லை. இப்போது கூப்பிட்டு தருகிறார்கள்.



நானும் நிறைய வெற்றி படங்களை தயாரித்து இருக்கிறேன். இயக்கி இருக்கிறேன். இதுபோன்ற ஒரு மகத்தான வெற்றியை சந்தித்தது இல்லை. ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி பிரச்சினையால் மக்கள் தியேட்டருக்கு வரவில்லை. இனி சினிமா அவ்வளவு தான் என்றார்கள். இப்போது இந்த படம் போன்று ‘விக்ரம் வேதா’ படமும் வெற்றிகரமாக ஓடுகிறது. இதனால் நல்ல படங்களை மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. இனி எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது” என்றார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, “ இந்த படத்தின் மூலம் புதிய இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவந்துள்ளன. வினியோகஸ்தர்களும் வாழ்த்து கூறியது புதிய அனுபவம் என்று சுந்தர்.சி. சார் என்னை பாராட்டினார்” என்று கூறினார்.

Tags:    

Similar News