சினிமா

முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாகியிருக்கும் கில்லி பம்பரம் கோலி

Published On 2017-05-28 06:30 GMT   |   Update On 2017-05-28 06:30 GMT
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கில்லி பம்பரம் கோலி’ என்ற படம் முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாகியிருக்கிறது.
ரஜினி நடிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவான ‘கபாலி’ படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து உருவாகும் பெரும்பாலான படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் ‘கில்லி பம்பரம் கோலி’ என்ற படமும் முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாகியுள்ளது.

நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுக்களான ‘கில்லி பம்பரம் கோலி’ என்ற தலைப்பு வைத்திருந்தாலும் முழுக்க முழுக்க இப்படம் மலேசியாவில் படமாக்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இப்படம் அந்த விளையாட்டுக்களின் பெருமையை பறைசாற்றும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை மனோகரன் என்பவர் இயக்கியிருக்கிறார்



இப்படத்தில் புதுமுகங்கள் தமிழ், பிரசாத், நரேஷ் என மூன்றுபேர் கதையின் நாயகர்களாகவும், தீப்தி ஷெட்டி என்ற புதுமுக நாயகி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். நாயகி இருந்தாலும் இப்படத்தில் பெயருக்குக்கூட காதல் கிடையாதாம். இப்படம் நட்பையும், வாழ்க்கைக்காக நடக்கும் போராட்டத்தையும் மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் வில்லனாக சந்தோஷ் குமார் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். படம் முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருந்தாலும் இதுவரையில் நடித்திராத வித்தியாசமான வேடங்களில் கஞ்சாகருப்பும் தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளது இப்படத்தின் சிறப்பு அம்சம்.



இந்த ஆண்டின் சிறந்த புதுமுகத்துக்கான விருது தன் அறிமுகத்துக்கு கிடைக்கும் என்று இப்போதே பெருமைப்படுகிறார் இயக்குனர் மனோகரன். அதேபோல பிரசாத்தின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களில் மூன்று பாடல்கள் விருதுக்கான தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் ஏதோ ஒரு வகையில் தன் படத்துக்கு விருது நிச்சயம் என்று அடித்துக் கூறுகிறார்.

நாககிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் சாய்சுரேஷின் படத்தொகுப்பும் தினாவின் நடன அமைப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு துணை சேர்த்துள்ளதாக கூறும் இயக்குனர் பணம் கொடுத்து தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் நிச்சயம் அதை உறுதி செய்வார்கள் என்றும் போஸ்ட் புரொடக்‌ஷனின் போதே அந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் சந்தோஷப்படுகிறார்.

இப்படத்தை சாய் ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் சார்பில் இயக்குனர் மனோகரனே தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற ஜுன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.  
Tags:    

Similar News