சினிமா

‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேசப்படும் படமாக இருக்கும்: சுந்தர்.சி நம்பிக்கை

Published On 2017-05-21 13:02 GMT   |   Update On 2017-05-21 13:02 GMT
சங்கமித்ரா படம் தென்னிந்திய சினிமாவை சர்வதேச அளவில் பேசப்பட வைக்கும் படமாக இருக்கும் என்று சுந்தர்.சி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தை பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் திரைப்பட விழா நடைபெறும் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.



இந்நிலையில், சங்கமித்ரா குறித்து முதன்முறையாக சுந்தர்.சி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ‘சங்கமித்ரா’ மிகப் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான யோசனை என்னிடம் இருந்தது. சரியான பட்ஜெட் மற்றும் தொழில்நுட்பத்துக்காக காத்திருந்தேன். இப்போதும் நேரம் கைகூடிவிட்டது.

சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ தென்னிந்திய சினிமாவில் தேசிய அளவில் பேச வைத்தது. ‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேசவைக்கும் படமாக உருவாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். அதனால்தான் இப்படத்தை நாங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடங்கினோம். இது முழுக்க முழுக்க இந்திய படமாக இருக்கும். சர்வதேச ரசிகர்களையும் மனதில் வைத்து படத்தை உருவாக்க உள்ளோம்.

இந்தியாவின் வரலாறு, காலாச்சாரம், வளங்களை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். என்னுடைய இயக்குனர் வாழ்க்கையில் இந்த படம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கவுள்ளனர். 2018-ஆம் ஆண்டு இறுதியில் முதல் பாகத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். 
Tags:    

Similar News